இந்திய விமானப் படையின் ஒத்திகையை பார்க்கச் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இந்திய விமானப்படை 1932 அக்டோபர் 8 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருந்த இந்திய விமானப் படைக்குச் சுதந்திரத்திற்குப் பிறகு, 1950ஆம் வருடம் தான் ‘இந்திய விமானப் படை’ என்று பெயர் மாற்றப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி விமானப் படை தினத்தைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் விமான சாகச நிகழ்ச்சிகளும், இந்திய விமானப் படையினரின் அணிவகுப்பும் நடைபெறும்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், விமானப் படை தினத்தை டெல்லியில் அல்லாமல் மற்ற ஊர்களில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 92வது இந்திய விமானப் படையின் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 வரை சென்னை மெரினாவில் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதில் அரக்கோணம், பெங்களூரு, தஞ்சாவூர், சூலூர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து 72 விமானங்கள் பங்குபெறும். இந்திய விமானப் படையின் சூரியகிரன் மற்றும் சாரங் விமான சாகசக் குழுவின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
மேலும் இந்தியக் கடற்படையின் ‘பி-81’ மற்றும் ‘டகோட்டா’ கப்பல்கள் கலந்துகொள்ள இருக்கின்றன. இதற்கான இறுதிக்கட்ட ஒத்திகை நேற்று மெரினா கடற்கரையில் நடந்துமுடிந்தது.
ஆனால் இதை அறியாத பலர் இன்று காலை முதலே மெரினாவில் கூடத்தொடங்கினர். அங்கு வந்த பிறகு விமான ஒத்திகை நடைபெறாது என்பதை அறிந்த பிறகு மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இதற்கிடையில் சுபாஷ் சந்திரபோஸ் போல் உடையணிந்த ஒரு நபர் இன்று மெரினாவிற்கு வந்திருந்தார். அவர் நமக்கு அளித்த பேட்டியில் “என் பெயர் ஆனந்த் குமார் பௌமிக். நான் சென்னை தியாகராயர் நகரில் வசிக்கிறேன். இன்று தான் நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்று நினைத்து நான் இங்கு வந்தேன்” என்றார்.
ஆனால், இன்று நிகழ்ச்சி இல்லை நாளை தான் என்று நாம் தெரிவித்த பின்பும், சற்றும் உற்சாகம் குறையாமல் நாளை நடைபெற இருக்கிற நிகழ்ச்சிக்குத் தவறாமல் கலந்துகொள்வேன் என்று நம்மிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து வருகிற 8ஆம் தேதி சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் காலை 7.30 முதல் 11 மணி வரை ராணுவ அணிவகுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
(புகைப்படங்கள் – மணிகண்டன்)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
அன்று விஜயுடன்… இன்று ரஜினியுடன் : வேட்டையனை வெல்லுமா பிளாக்?
ஒரே ஆபரேசனில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை : சத்தீஸ்கரில் இது முதன்முறை!