கடைசி டி20 : வரலாற்று வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!

Published On:

| By christopher

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் இரு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்தன.

ADVERTISEMENT

இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(பிப்ரவரி 1) இரவு நடைபெற்றது.

சுப்மன் கில் சூப்பர் சதம்

ADVERTISEMENT

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது.

இந்திய வீரர்களில் அதிகபட்சமாக அபாரமான ஆட்டத்தை ஆரம்பம் முதலே வெளிபடுத்திய சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ADVERTISEMENT
india vs newzealand 3rd t20

ராகுல் திரிபாதி(44), கேப்டன் ஹர்திக் பாண்டியா(30) மற்றும் சூர்யகுமார் யாதவ்(24) நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சொதப்பிய நியூசிலாந்து

இதைத் தொடர்ந்து 235 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது.

எனினும் இந்திய அணிக்கு அப்படியே மாறாக நியூசிலாந்து அணி பேட்டிங்கில் படு சொதப்பலான ஆட்டத்தை வெளிபடுத்தியது.

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் ஓவரில் இருந்தே தடுமாறிய நியூசிலாந்து அணி 5 ஓவர்களில் ஃபின் ஆலன், கான்வே சாப்மேன், பிலிப்ஸ் மற்றும் பிரேஸ்வெல் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் நிலைகுலைந்த நியூசிலாந்து அணி வீரர்கள் அதன்பின்னரும் எந்தவித சிரமும் கொடுக்காமல் இந்திய அணியின் அனல் பறக்கும் பந்துவீச்சுக்கு இரையாகினர்.

12.1 ஓவரில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆன நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.

இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக மிக குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனை நியூசிலாந்து அணிக்கு சென்றுள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல்(35) மற்றும் சாண்ட்னர்(13) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர்.

பந்துவீச்சில் மிரட்டிய பாண்டியா

அதே வேளையில் இந்திய அணி தரப்பில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், உம்ரன் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

ஆட்டநாயகன் விருதை சுப்மன் கில்லும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்டியாவும் பெற்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

பழைய மற்றும் புதிய வருமான வரி அடுக்கு : செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?

“மக்களுடன் போலீஸ் நெருங்க வேண்டும்” கள ஆய்வில் முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share