முதல் டி20 போட்டியை தொடர்ந்து, நேற்று (ஜனவரி 14) இரவு இந்தூரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஸ்னோய் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா முதல் போட்டியைப் போலவே இந்த ஆட்டத்திலும் டக் அவுட் ஆனார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக முறை(12) டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை பெற்றார்.
எனினும் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 68 ரன்களும், ஆல்ரவுண்டர் ஷிவம் துபே 63 ரன்களும் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

மொஹாலியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் துபே இதே போன்று கடைசி வரை ஆட்டமிழக்கமால் 60 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றுவதற்கு முக்கிய பங்கு வகித்த துபே போட்டிக்கு பின்னர் அளித்த பேட்டியில், தனது சிறப்பான பேட்டிங்கிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தான் காரணம் என்று கூறினார்.
அவர், “இந்தக் கிரெடிட் சிஎஸ்கே அணிக்கும் மஹி பாய்க்குமே(தோனி) சேரும். நான் சிஎஸ்கே அணியில் விளையாடும்போது அவர் என்னிடம் நன்றாக பேட்டிங் செய்யும் திறன் இருப்பதாக கூறினார். அதேநேரத்தில் அவர் என்னை புத்திசாலியாக விளையாட அறிவுறுத்தினார். அவர் தந்த ஊக்கத்தால் என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்தினேன்.
![]()
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வீரரிடமிருந்து என்ன பெற வேண்டும் என்பது நன்றாக தெரியும். ஐபிஎல்லில் என்னால் ரன் குவிக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஹஸ்ஸி மற்றும் ஃப்ளெமிங் போன்றவர்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் விரும்பியதை என்னால் செய்ய முடியும் என்று நானும் நம்புகிறேன். அவ்வளவு தான்” என்று துபே கூறியுள்ளார்.
தோனியின் பெயரை துபே குறிப்பிட்டதை அடுத்து நேற்று மைதானத்தில் எதிரொலித்த நிலையில், இரவு முதல் சமூகவலைதளங்களிலும் தோனியின் பெயர் டிரெண்டிங்கில் வந்துள்ளது.
மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து கடைசி மற்றும் 3வது போட்டி வரும் 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”யாராலும் எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது”: இஸ்ரேல் பிரதமர் உறுதி
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: மதுபான கடைகளை மூடும் 3-வது மாநிலம்!
