நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (நவம்பர் 12) நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி அரை சதமும், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் சதமும் விளாசியிருந்தனர்.

இதனால் 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து தொடக்க ஆட்டகாரர்கள் வெஸ்லி பாரெஸ்ஸி, மேக்ஸ் ஓடெளவ்ட் களமிறங்கினர்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் வெஸ்லி பாரெஸ்ஸி 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் கே எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கோலின் ஆக்கர்மென் மற்றும் மேக்ஸ் ஓடெளவ்ட் ஜோடி நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர்.
குல்தீப் யாதவ் வீசிய 12-ஆவது ஓவரில் கோலின் ஆக்கர்மென் எல்பிடபில்யூ அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ஸ்காட் எட்வர்டு, பாஸ் டீ லீடி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் நெதர்லாந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

37 ஓவர்களில் 172 ரன்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து அணி திணறியது. தேஜா நிதாமனரு பொறுமையாக ஆடி 54 ரன்கள் எடுத்திருந்தார். 47.5 ஓவரில் நெதர்லாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனால் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி பெற்றுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மயிலாப்பூர் சாய் பாபா கோவிலில் தீ விபத்து!
INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!
