உலக அளவில் அரசால் அதிக முறை இணையத்தளம் முடக்கப்பட்ட நாடுகளில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
நாட்டில் உள்ள பகுதிகளில் திடீர் கிளர்ச்சிகள், கலவரங்கள், வன்முறைகள் ஏற்பட்டால் அது மேலும் வலுவடையாமல் இருக்கவும், மக்களுக்கு மத்தியில் அதைப் பற்றிய செய்திகள் பரவாமல் இருக்கவும் அந்தப் பகுதியில் இணையதள சேவை முடக்கப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளங்கள் மூலம் கருத்துகளும் செய்திகளும் வேகமாக உடனுக்குடன் அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுவதால் அவசர நிலை ஏற்படும் சமயங்களில் இணையதளம் முடக்கப்படுவதே அரசுகளின் முதல் நடவடிக்கையாக இருக்கிறது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் சர்வதேச அளவில் நடந்த ஆய்வின்படி தொடர்ந்து ஆறாவது வருடமாக இணையதள முடக்கம் அதிகம் ஏற்பட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 116 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. சுமார் எட்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற மணிப்பூர் இனக் கலவரத்தின் போது அதிகப்படியாக 47 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்து ஜம்மு காஷ்மீரில் 17 முறையும், பிகாரில் 12 முறையும், ஹரியானாவில் 11 முறையும், மேற்கு வங்கத்தில் 6 முறையும், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் 5 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இந்தப் பட்டியலில் ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் 37 முறை இணைய முடக்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, ஈரானில் 34 முறையும் , பாலஸ்தீனத்தில் 16 முறையும், உக்ரைனில் 8 முறையும், பாகிஸ்தானில் 7 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…