இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வரும் நிலையில், தனிநபர் வருமானம் ஏன் வேகமாக உயரவில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது. இந்த கேள்வி இந்தியாவின் வளர்ச்சி குறித்த அனைத்து விவாதங்களிலும் ஒரு முக்கிய கவலையாக உள்ளது. பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சாதாரண மக்கள் என அனைவரும் இதை உணர்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி, இந்தியாவின் தனிநபர் வருமானம் சுமார் 2,818 டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது சீனாவை விட (சுமார் 13,300 டாலர்கள்) மற்றும் வளர்ந்த நாடுகளை விட (40,000 டாலர்களுக்கு மேல்) மிகக் குறைவு.
காரணம் என்ன?
இந்த பெரிய இடைவெளி இருந்தாலும், பெரிய பொருளாதாரங்கள் வளரும் வரிசைமுறையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மொத்த பொருளாதார அளவு அதிகரிப்பதும், தனிநபர் வருமானம் மெதுவாக உயர்வதும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, அதன் வளர்ச்சியை எப்படி சமமாகப் பகிர்ந்தளிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளும் இந்த காலகட்டத்தில் இவை இரண்டும் ஒன்றாகவே நிகழ்கின்றன. பொருளாதார வல்லுநர்கள் இதை இந்தியாவின் “இரட்டை யதார்த்தம்” என்று கூறுகின்றனர். ஒருபுறம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2025இல் 4 டிரில்லியன் டாலர்களைத் தாண்டி வேகமாக வளர்ந்து வருகிறது. மறுபுறம், மக்களின் வருமானத்தை உயர்த்த இந்தியா இன்னும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படாமல், ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன.
பொருளாதார வளர்ச்சியில் வேகம்:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிகவும் சீராக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், IMF தரவுகளின்படி, இந்தியா ஆண்டுக்கு சராசரியாக 6.5% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் பார்த்தால், இந்தியா ஏற்கனவே 13 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் GDP உடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. பெயரளவு (nominal) அடிப்படையில் பார்த்தால், ஜப்பானுடனான இந்தியாவின் இடைவெளி ஒரு டிரில்லியன் டாலருக்கும் குறைவாகக் குறைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார அளவு அதிகரிக்கும்போது, அதன் உலகளாவிய செல்வாக்கும் உள்நாட்டுத் திறனும் அதிகரிக்கிறது.
இன்னும் நீண்ட காலம் உள்ளது:
மொத்த GDP மற்றும் தனிநபர் வருமானம் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுகின்றன. மொத்த GDP ஒரு பொருளாதாரத்தின் முழு அளவைக் காட்டுகிறது. இது புவிசார் அரசியல் முக்கியத்துவம், பேரம் பேசும் சக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, காலநிலை நடவடிக்கை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதித் திறன், உலகளாவிய மூலதனத்தை ஈர்க்கும் திறன் மற்றும் விநியோகச் சங்கிலிகளை வடிவமைக்கும் திறன் ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது. தனிநபர் வருமானம் என்பது பொருளாதாரத்தில் ஒரு தனிநபரின் நிலையை பிரதிபலிக்கிறது. இந்த அளவுகோலில், இந்தியா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
இந்தியாவின் உயரும் GDP க்கும் அதன் மிதமான தனிநபர் வருமானத்திற்கும் இடையிலான இடைவெளி பெரும்பாலும் ஒரு முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் பொருளாதார வல்லுநர்கள் இது ஒரு வரிசைமுறை பிரச்சினை என்று வாதிடுகின்றனர். பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகள் பொதுவாக வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் தனிநபர் வருமானத்தை விட மொத்த உற்பத்தியை வேகமாக அதிகரிக்கின்றன. இந்தியா இந்த முறையைப் பின்பற்றுகிறது. பல நீண்டகால மாற்றங்கள் ஏற்கனவே பொருளாதாரத்தின் அடிப்படையை மறுவடிவமைத்து வருகின்றன.
தனிநபர் வருமானமும் உயர வேண்டும்:
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வருகிறது. அதன் தனிநபர் வருமானம் உலகத் தரத்தின்படி குறைவாகவே உள்ளது. இந்த இரண்டு உண்மைகளும் முரண்பாடு இல்லாமல் ஒன்றாக இருக்கலாம். ஒன்று நாட்டின் உலகப் பொருளாதாரத்தில் விரிவடையும் தடத்தைக் காட்டுகிறது; மற்றொன்று வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதைக் காட்டுகிறது. பொருளாதார அளவின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதுடன், வீட்டு வருமானத்தை உயர்த்துவம் முக்கியம். அந்த வகையில், GDP உயர்வு ஒரு இறுதி இலக்கு அல்ல. இது பரவலான செழிப்பை அதிகரிக்கும் பயணத்தில் ஒரு படியாகும். பொருளாதார வளர்ச்சியுடன் தனிநபர் வருமானமும் அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
