பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நவம்பர் 11-ந் தேதி 12 பேரை பலி கொண்ட தற்கொலைப் படை தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டி உள்ளார்.
இஸ்லாமாபத்தின் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே நேற்று பிற்பகல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் பலியாகினர்; 27 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், பாகிஸ்தானை சீர்குலைக்கும் நோக்கில் இந்திய அரசின் பின்னணியில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள வாணா பகுதியில் நவம்பர் 10 அன்று நடந்த மற்றொரு தாக்குதலுக்கும் இந்தியாதான் காரணம். இந்திய ஆதரவு பயங்கரவாதிகளே இத்தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ளனர்” என்றார்.
ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனிடையே பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
