பெங்களூரில் நடைபெற்று வரும் ஜி20 கூட்டத்தில் கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குப்படுத்துவது அல்லது தடை செய்யும் சட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதித்து வந்தாலும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஒரு நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாக கிரிப்டோ கரன்சி உள்ளது. எந்தவித சட்ட விதிகளும் இல்லாமல் இதனை பயன்படுத்தலாம். இதனை எந்த ஒரு அரசும் கட்டுப்படுத்தாது.

கிரிப்டோ கரன்சியானது பண மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜி20 நாடுகள் சபையின் கூட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஜி20 நாடுகளின் நிதித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க ஒரு கூட்டு உலகளாவிய முயற்சியை எடுக்க விரும்புவதாகவும், G20 உறுப்பு நாடுகளுக்கு பொதுவான பிட்காயின் குறித்த ஒழுங்குமுறை கட்டமைப்பை எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றி விவாதிக்க ஒரு கருத்தரங்கை நடத்த உள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

G20 கூட்டத்தில் அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் பேசுகையில், “கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமானது. ஆனால் அமெரிக்கா இந்த விஷயத்தில் எந்தவிதமான தடைகளையும் பரிந்துரைக்கவில்லை. ஒரு வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியமானது.நாங்கள் மற்ற அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
