அயோத்தியில் யோகி ஆதித்யநாத்துக்கு கோயில்!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அம்மாநில பாஜக தொண்டர் ஒருவர் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள மவுரியா கா பூர்வா என்னும் கிராமத்தில், 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள 32 வயதான பிரபாகர் மவுரியா என்பவர், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கோயில் கட்டி உள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியபோதே,
மவுரியாவும் இரு சிற்பிகளுடன் யோகி ஆதித்யநாத் கோவிலை கட்ட தொடங்கியுள்ளார்.
தன்னை ஒரு ‘யோகி தொண்டன்’ என்றும், கட்சிக்காக ஏராளமான பாடல்களை உருவாக்கிய யூடியூபர் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் மவுரியா, யார் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழி செய்கிறாரோ,
அவர்களுக்கு கோவில் கட்டுவதாக தனக்கு தானே உறுதியளித்து உள்ளதால், யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் கட்டியதாக கூறியுள்ளார்.
மொத்தம் 20 அடி உயரமுள்ள இந்த கோவிலில் யோகியின் உருவத்திலான சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அச்சிலையின் கையில் வில்லும், அம்புகளும் இருக்க, சிலையின் தலைக்கு பின்னால் சூரிய ஒளி வட்டம் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
கோவில் கட்டுவதற்காக மொத்தம் 7 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ள மவுரியா, இந்த தொகையை தனது யூடியூப் சேனலின் மூலம் பெற்றதாக கூறியுள்ளார்.
கோயிலுக்கு தினமும் இருமுறை மவுரியா, தானே பூஜை செய்து வழிபாடு செய்கிறார். மேலும், வழிபாடு நடத்துகையில், ‘ஜெய், ஜெய் யோகி பாபா’ என்று தானே இசையமைத்த பாடல்களை பாடி ஆரத்தி எடுக்கிறார்.
இது குறித்து மவுரியா கூறுகையில், ‘யோகி தனது அம்புகளை அனைத்து வகையான குற்றங்கள் மற்றும் ஊழல்கள் மீது குறிவைக்கிறார். எனவே இது தான் சரியான சின்னம்’ என்றார்.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வலம் வரக் கூடிய புதிய கோயிலாக யோகி ஆதித்யநாத் கோவிலும் இடம்பெற்றுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
60 மாணவிகளின் குளியல் வீடியோ : வார்டன் சஸ்பெண்ட்!
ஐபோன் 14 வாங்கிய முதல் இந்தியர்: யார் இந்த தீரஜ்?