மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: விசாரணைக் குழு அமைப்பு!

Published On:

| By Monisha

wrestlers protest inquiry committee

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் பாலியல் தொல்லைக்கும், பயிற்சியாளர்களால் பலாத்காரத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறி மல்யுத்த வீராங்கனைகளிடம் இருந்து சமீபத்தில் புகார் எழுந்தது.

இதையடுத்து, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளிட்டோரைப் பதவியில் இருந்து நீக்கம் செய்து மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை அடியோடு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகளவில் இந்தியாவிற்கு அதிக பதக்கங்களைப் பெற்றுத்தந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக நடந்துள்ள கொடுமைகள் இந்த போராட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீரர்களின் போராட்டத்திற்கு ஹரியானா முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்கை சிறையில் அடைக்கும் வரை போராட்டம் நடைபெறும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்ததோடு மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

wrestlers protest inquiry committee

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில், மேரி கோம், டோலா பானர்ஜி, அலக்நந்தா அசோக், யோகேஸ்வர் தத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

புகார் தொடர்பாக அகில இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோனிஷா

2023 ஐபிஎல்: ரிஷப் பண்ட் பங்கேற்க வேண்டும் – ரிக்கி பாண்டிங்

விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்: சுசீந்திரன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share