தங்கக் கடத்தல், போதைப் பொருட்கள் ஒருபுறம் இருக்க… இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் தினசரி உபயோகப் பொருட்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பொருளின் விவரம் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் ஒவ்வொரு நாளும் சுமார் 25,000 தடை செய்யப்பட்ட பொருட்கள் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படுவதாக சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (பிசிஏஎஸ்) தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பிசிஏஎஸ் தலைமையகத்தில் விமானப் பாதுகாப்பு கலாசார வாரத்தை பிசிஏஎஸ் இயக்குனர் சுல்ஃபிகர் ஹசன் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு நாளும், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுமார் எட்டு லட்சம் கைப்பைகள் மற்றும் ஐந்து லட்சம் செக்-இன் பேக்கேஜ்களை நாங்கள் சோதனை செய்கிறோம். சோதனையின்போது, சுமார் 25,000 தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டறியப்படுகின்றன.
செக்-இன் பேக்கேஜ்களில் பவர் பேங்குகள் (44 சதவிகிதம்), லைட்டர்கள் (19 சதவிகிதம்), பேட்டரிகள் (18 சதவிகிதம்) மற்றும் மடிக்கணினிகள் (11 சதவிகிதம்) ஆகிய தடை செய்யப்பட்ட பொருட்கள் அடிக்கடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைப்பைகளில், லைட்டர்கள் (26 சதவிகிதம்), கத்தரிக்கோல் (22 சதவிகிதம்), கத்தி (16 சதவிகிதம்) ஆகிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும் 3,300 விமானங்களில் 4.8 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். டிரோன்களை உள்ளடக்கிய இணைய அச்சுறுத்தல்கள் இந்தத் துறைக்கு புது வகையான அச்சுறுத்தல்களாகும். பயணிகளின் பாதுகாப்புக்காக நாங்கள் அனைத்து முனைகளிலும் பணியாற்றி வருகிறோம். விமானத்தில் உள்ள பயணிகளின் பாதுகாப்போடு, விமான நிலையத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பையும் சமமாக கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
WI vs IND: நீயா! நானா! ஒரு நாள் கோப்பை யாருக்கு?