ஹைதராபாத்தில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கி “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட வற்புறுத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கடந்த நவம்பர் 1-ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ஐசிஎப்ஏஐ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஹிமாங் பன்சால் என்ற மாணவரை அவருடன் படிக்கும் சக மாணவர்கள் அறைந்து உதைத்து தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் ஹிமாங் பன்சாலை மாணவர்கள் கடுமையாக தாக்குகின்றனர். பின்னர் அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்ப வற்புறுத்துகின்றனர்.

வீடியோவில் பேசிய ஒருவர், “கோமா நிலைக்கு செல்லும் வரை தாக்குவோம். அப்போதுதான் அவர் புதிய உலகத்தை நினைவில் கொள்வார். அவருடைய சித்தாந்தத்தை சரி செய்ய வேண்டும்” என்று கூறுகிறார்.
இந்த சம்பவம் குறித்து ஹிமாங் பன்சால் அளித்த புகாரை தொடர்ந்து, சைபராபாத் போலீசார் 12 மாணவர்களை கைது செய்துள்ளனர்.
சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா இந்த சம்பவம் குறித்து கூறும்போது, “இது வட மாநில தென் மாநில மாணவர்கள் மோதல் இல்லை.
ஹிமாங் பன்சால் என்ற சட்டக்கல்லூரி மாணவர் சமூக ஊடகங்களில் முகமது நபிக்கு எதிராக கருத்து தெரிவித்ததை அடுத்து நவம்பர் 1-ஆம் தேதி அவருடன் பயிலும் சக மாணவர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
மதம் சார்ந்த கோஷங்களை எழுப்பும்படி ஹிமாங் பன்சால் வற்புறுத்தப்பட்டுள்ளார்.
மாணவனின் வயிற்றுப்பகுதியில் குத்தி, உதைத்துள்ளனர், ஆடைகளை களைந்து அவரது அந்தரங்க உறுப்பை தாக்கியுள்ளனர்.
சில ரசாயன பொடிகளை சாப்பிட கட்டாயப்படுத்தியுள்ளனர். பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மொத்தமுள்ள 12 மாணவர்களில் ஒருவர் மைனர். இவ்விவகாரத்தில் மொத்தம் 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ராகிங் மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி பதிவாளர் மற்றும் இயக்குனர் உள்பட 5 கல்லூரி அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 12 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.” என்றார்.
இந்த சம்பவம் குறித்து பாஜக தெலங்கானா தலைவர் ரச்சனா ரெட்டி கூறும்போது,
“முகமது நபிகள் குறித்து வீடியோ வெளியிட்ட தெலங்கானா சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தெலங்கானா அரசு அலட்சியம் காட்டி வருகிறது. மேலும், பெரும்பான்மை மதத்தினரின் உரிமைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு எதிராக கண்மூடித்தனமாக செயல்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
10% இட ஒதுக்கீடு: மௌனம் கலைத்த ஓபிஎஸ்
இந்த அணி பேட்டிங்கில் சொதப்பியதற்கு இதுதான் காரணம்! – கவாஸ்கர்