நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குடன் இணைந்து நேற்று (பிப்ரவரி 21) வீடியோ கான்பரன்சிங் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைந்த டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறையைத் தொடங்கி வைத்தனர்.
இந்தியாவின் யுபிஐ, சிங்கப்பூரின் பே நவ் ஆகியவை மூலம் இனி சிங்கப்பூர்- இந்தியாவுக்கு இடையே டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறை எளிதாக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்டு பிரதமர்களுக்கிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் மூலம் காணொலிக் காட்சி தொடங்கியது. பரஸ்பரம் நலன்சார்ந்து இருவரும் விசாரித்தனர். பிறகு இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள் குறித்தும் விவாதித்தனர்.
இந்தியா – சிங்கப்பூர் இடையே நட்புறவை முன்னெடுத்து செல்வதற்காக பிரதமர் லீக்-கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ் அவருடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த விழாவில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், சிங்கப்பூர் நிதி ஆணைய மேலாண்மை இயக்குநர் ரவி மேனன் ஆகியோர் தங்களது மொபைல் போன்கள் மூலம் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.
”இந்தியாவின் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மற்றும் சிங்கப்பூரின் பே நவ் (Pay Now) ஆகியவற்றுக்கு இடையேயான எளிதான இணைப்பு, இரு பிராந்தியங்களில் வசிப்பவர்கள் விரைவான மற்றும் செலவு குறைந்த பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்கும்.

இந்த இணைப்பு இரு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறையை எளிதாக்குகிறது.
சிங்கப்பூர்- இந்தியாவில் இருக்கும் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், என்ஆர்ஐக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மிகவும் பயனளிக்கும்” என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கூறினார்.
இந்த இணைப்பு இரு நாட்டு குடிமக்களும் மொபைல் ஃபோன் எண்களைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நிதியை மாற்ற அனுமதிக்கும்.
எல்லை தாண்டிய பகுதியில் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கான பணப்பரிவர்த்தனை வசதியை தொடங்கிய முதல் நாடு சிங்கப்பூர் ஆகும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்கு இவ்வசதி உதவும்.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஃபின்டெக் பயன்களை சாதாரண மனிதர்களுக்கும் குறைந்த செலவில் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கும் பணத்தை பரிமாற்றம் செய்வதன் மூலம் கொண்டுவரமுடியும்.
க்யூ ஆர் கோட் மூலம் யூபிஐ பணப் பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்வது சிங்கப்பூரில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களில் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்