ரேபிடோ, ஓலா, உபர் இருசக்கர வாகன சேவைகளுக்குத் தடை!
டெல்லி அரசு ரேபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளைத் தடை செய்துள்ளது. இதை மீறினால் ரூ.10,000அபராதமும், ஓராண்டு சிறையும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இன்று பல நகரங்களில் மக்களுக்குப் பயனுள்ள வாகன சேவையாக இயங்கி வருவது ரேபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி (பைக் டாக்ஸி) சேவைகள்.
கார், ஆட்டோ போன்ற மூன்று அல்லது நான்கு சக்கர வாகனங்களின் டாக்ஸி சேவையைக் காட்டிலும் குறைந்த கட்டணம் கொண்ட சேவையாக இருப்பது இருசக்கர டாக்ஸி சேவைதான்.
எனவே இது அறிமுகமான சில காலங்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், கல்லூரிகளில் படிக்கும், வேலை பார்க்கும் இளைஞர்களின் பகுதிநேர வேலையாகவும், வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ரேபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988-இன் மீறலாகக் கருதப்படும். இந்த சட்டத்தை மீறினால் ஓட்டுனர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பைக் டாக்ஸிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும், பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியைத் தொடர்ந்து இருசக்கர டாக்ஸி சேவையுள்ள சென்னை உள்ளிட்ட மற்ற பெருநகரங்களிலும் இந்தத் தடை உத்தரவு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இருசக்கர வாகனங்களில் வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், அப்படியான சேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கும் மோட்டார் வாகனச் சட்டத்தில் அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
அடி மேல் அடி! துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!