டெல்லி நோக்கி 130 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் திடீர் பிரேக் போட்டதால், அதில் படுகாயமடைந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓடிசா மாநிலம் பூரியில் இருந்து புதுடெல்லிக்கு நேற்று (நவம்பர் 12) புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. நள்ளிரவு 12.05 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலம் கோமோ மற்றும் கோடெர்மா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது பர்சாபாத் கிராமம் அருகே மேல்நிலை மின்சாரக் கம்பி அறுந்து விழுந்தது. அதனை கவனித்த ரயில் ஓட்டுநர், 130 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை உடனடியாக ’எமர்ஜென்சி பிரேக்’ போட்டு நிறுத்தியுள்ளார்.
இதனை எதிர்பாராத பயணிகளில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பயணிகள் பலரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையறித்து கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் ரயில்வே கோட்ட மேலாளர் கே.கே.சின்ஹா மற்றும் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதனால் சுமார் 4 மணி நேரம் ரயில்சேவை பாதிக்கப்பட்ட நிலையில், தன்பாத் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள கிராண்ட் கார்டு லைனில் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
திடீர் பிரேக் போட்டதால் இருவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா