துருக்கியில் உள்ள தேசிய விண்வெளி நிறுவனத்தின் தலைமையத்தில் பயங்கரவாதிகள் இன்று (அக்டோபர் 23) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் கசான் நகரில் நேற்று (அக்டோபர் 22) பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக துருக்கி அதிபர் எர்டோகன் ரஷ்யா சென்றுள்ளார்.
இந்தநிலையில், துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள அந்நாட்டின் தேசிய விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று துப்பாக்கியுடன் புகுந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில், 3 பேர் உயிரிழந்ததாவும், 14 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “துருக்கி தேசிய விண்வெளி நிறுவனத்தின் தலைமையத்தில் நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாக நான் கண்டிக்கிறேன். பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கும் வரை எங்களது போராட்டம் உறுதியுடன் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
துருக்கியில் அதிபர் இல்லாத நேரத்தில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் உலக அளவில் மிகவும் பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு!