உச்சநீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் இன்று (செப்டம்பர் 3) சிறையில் இருந்து வெளியே வந்தார்.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்தேறிய கோத்ரா கலவரம் தொடர்பான வழக்கில்
மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் போலி சாட்சியங்களை தயாரித்ததாக கூறி கடந்த ஜூன் 25ல் குஜராத் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதிகள் ரவீந்திர பாத், சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு தீஸ்தா சீதல்வாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
மேலும், தீஸ்தா தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் தற்போது சபர்மதி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இரண்டு மாதமாக சிறையில் இருந்த அவருக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு அமைப்பினரும் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது அவர் வெளியே வந்துள்ளார். அதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தீஸ்தா சீதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகள் என்ன?