பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் மோதிக்கொண்ட நிலையில் சண்டையை தடுத்து நிறுத்தச் சென்ற சிறுவனை முதல் மாடியில் இருந்து தூக்கி வீசியதால், படுகாயம் அடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நரகுண்ட் தாலுக்காவில் உள்ள ஹாட்லி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களாக முத்தப்பா மற்றும் கீதா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இரண்டு ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இன்று(டிசம்பர் 20) காலை பள்ளி துவங்கிய நிலையில் இருவரும் பள்ளி முதல் மாடியில் வழக்கம் போல சண்டையிட்டுள்ளனர்.
அப்போது முத்தப்பா, கீதாவை அங்கிருந்த மண்வெட்டியை கொண்டு தாக்கியுள்ளார். இந்த தாக்குதலின் போது அதே பள்ளியில் 4 வது வகுப்பு படித்து வரும் ஆசிரியர் கீதாவின் 10 வயது மகன் பரத் முத்தப்பாவை தடுக்க முயற்சித்துள்ளான்.
கோபத்தின் உச்சத்தில் இருந்த முத்தப்பா பரத்தை ஒரு கையில் தூக்கி முதல் மாடியில் இருந்து கீழ்தளத்தில் தூக்கி வீசியுள்ளார்.
இதில் பரத் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் காயம் அடைந்திருந்த கீதா மற்றும் பரத் ஆகியோரை கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தலையில் படுகாயம் அடைந்திருந்த பரத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் முத்தப்பா இந்த தகவல் கிடைத்தவுடன் தலைமறைவாகியுள்ளார். முத்தப்பா மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கலை.ரா
“குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார் நயன்” – விக்னேஷ் சிவன் பேட்டி!