தீபாவளிக்கு 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 22) தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது பட்டாசுகள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்.
ஆனால் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி அர்ஜூன் கோபால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை எதிர்த்து பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பட்டாசுத் தொழிலாளர்களின் குடும்ப நலன் கருதி பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல் பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரியும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் கடந்த 15 ஆம் தேதி நீதிபதிகள் போபண்ணா,சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது பட்டாசுகளில் 22 முதல் 30 விழுக்காடு வரை பேரியம் என்ற நச்சுப்பொருட்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பட்டாசு ஆலைகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் வாதிடப்பட்டது.
இந்நிலையில் இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம். தீபாவளி அன்று நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை. ஏற்கெனவே உள்ள காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்கலாம். டெல்லியில் பட்டாசுக்கான தடை தொடரும் என உத்தரவிட்டுள்ளது.
மோனிஷா
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோ யார்?
எடப்பாடி பக்கத்தில் பன்னீரா? சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்ட அதிமுக