மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மணிப்பூர் கலவரத்தில் மேலும் ஒரு கொடூர சம்பவமாக, குகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கலவரம் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூர சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், “மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோக்கள் கடும் மன உளைச்சலை தருகின்றன.
இந்த சம்பவத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் உச்சநீதிமன்றம் தலையிடும்.
கலவர பகுதிகளில் பெண்கள் ஒரு கருவியாக பயன்படுத்துவது அரசியலமைப்பு துஷ்பிரயோகத்தின் உச்சம். அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மே மாதம் முதல் தற்போது வரையிலான நடவடிக்கை குறித்து மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அரசு மரியாதையை மறுத்த உம்மன் சாண்டி…கேரளாவின் இன்னொரு முன்னுதாரணம்
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!