”ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வழக்கு தாக்கல் செய்ய என்ன காரணம்?” என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. supreme court question tn govt
கோயம்புத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி மலைகளில் 2006-2014 ஆண்டுக்கு இடையில் கட்டுமானப் பணிகளை சத்குருவின் ஈஷா அறக்கட்டளை மேற்கொண்டது. இந்த நிலையில் விதிகளை மீறி கட்டடம் கட்டியதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்த வழக்கில் கடந்த டிசம்பர் 2022ஆம் ஆண்டு அந்த நோட்டீஸை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 14) விசாரணைக்கு வந்தது.
கட்டுமானத்தை இடிக்க அனுமதிக்க முடியாது! supreme court question tn govt
அப்போது நீதிபதிகள், “உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அதிகாரிகளை தடை செய்தது எது? அதற்கு உங்கள் விளக்கம் என்ன? தமிழக அரசு இந்த விவகாரத்தினை திடீரென கொண்டு வந்துள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதுபோன்ற வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரணை நடத்தினால் சாதாரண மனிதர்கள் எங்கே போவார்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், 2006-2014 க்கு இடையில் எழுப்பப்பட்ட கட்டுமானப் பணிகள் குறித்து சர்ச்சைக்குரிய விளக்கம் அளிக்கும் நோட்டீஸை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “யோகா மையம் கல்வி நிறுவனம் அல்ல என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு நிறுவனம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிப்பதற்கான நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் மட்டுமே உங்களுக்கு நியாயமான காரணம் இருக்க முடியும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரியாக செயல்படவில்லை என்று நீங்கள் கூறுவதில் ஒரே ஒரு வரி மட்டுமே உள்ளது. முதலில் அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அல்லது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதன்பின் நோட்டீஸ் அனுப்புங்கள். உங்கள் கண்கள் முன்பாகவே திறந்து வைக்கப்பட்ட லட்சக்கணக்கான சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள கட்டுமானத்தை இடிக்க அனுமதிக்க முடியாது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “அனுமதிக்காக அவர்கள் விண்ணப்பம் செய்த போது அங்கு கட்டடம் கட்டப்படுவதாக இருந்தது. எனினும் 2012ஆம் ஆண்டில் அனுமதி கொடுக்கப்பட்டது. அது சுற்றுச்சூழல் தடையின்மை சான்றுக்கு உட்பட்டது என்று அப்போதே தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் சுற்றுச்சூழல் தடையின்மை சான்றிதழ் தேவையில்லை என்றனர்” என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், “அந்த பயிற்சி மையமானது கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனத்தின் வகைப்பாட்டில் வருவதால் மத்திய அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுச்சூழல் தடையின்மை சான்று தேவையில்லை என்று அதிகாரிகள் ஈஷா பவுண்டேஷனிடம் கூறியுள்ளனர்.
இப்போது ஒரு யோகா மையம் கட்டப்பட்டுவிட்ட நிலையில், அதனை மனிதர்கள் வாழ்வதற்கு அபாயம் விளைவிக்கக் கூடியது என்று நீங்கள் சொல்லவில்லை. வேறு எந்த ஒரு அபாயமும் இருப்பதாக கூறவில்லை.
அங்கு கழிவு நீர் அகற்றும் பிரிவு உள்ளதா? இயற்கையான ஒளி, காற்று, குறிப்பிடத்தக்க அளவு பசுமை பரப்பளவு உள்ளதா? அதற்கெல்லாம் இணக்கமாக சுற்றுச்சூழல் நெறிமுறைகளுக்கு ஏற்ப உள்ளதா? என்பதை உறுதி செய்வதில்தான் தமிழ்நாடு அதிகாரிகள் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும். பின்னர் யார் இதையெல்லாம் கடைப்பிடிக்க கடமைப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து இந்த விஷயங்களுக்குள் நீங்கள் அனைத்து சந்தேகங்களையும் எழுப்ப வேண்டும்” என்று நீதிபதி கூறினார்.
மகா சிவராத்திரி விழா வருகிறது…
அப்போது ஈஷா அறக்கட்டளையின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “அறக்கட்டளைக்கு தேவையான அனைத்து ஒப்புதல்களும் உள்ளன. எங்களிடம் நகராட்சி மற்றும் பிற அனைத்து ஒப்புதல்களும் உள்ளன. அவர்கள் சுற்றுச்சூழல் தடையின்மை சான்று பற்றி மட்டுமே பேசுகிறார்கள். 20% மட்டுமே கட்டப்பட்டுள்ளது, 80% பசுமையானது. இது இந்தியாவின் சிறந்த யோகா மற்றும் தியான மையங்களில் ஒன்றாகும். வரும் பிப்ரவரி 26ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த விஷயம் குறித்து நீதிமன்றம் இரண்டு வாரம் கழித்து விசாரிக்கலாம்” என்று ரோஹத்கி கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள். இந்த வழக்கை இரண்டு வாரம் கழித்து விசாரிப்பதாக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.