நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்த ரிட் மனுவின் விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 14) உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியதற்கு எதிராக தமிழக அரசு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுதொடர்பாக ஏற்கனவே நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வைக் கட்டாயமாக்கிய சட்டத் திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து விரிவான புள்ளிவிவரங்களைத் தமிழக அரசு குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவைக் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்சு தூலியா விசாரித்தார்.
விசாரணையில், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு ரிட் மனு விசாரணைக்கு உகந்தது என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று (அக்டோபர் 14) ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்து.
இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் நீட் தேர்வு வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
மோனிஷா
அரசு வழங்கும் இலவச காலணி மாணவிக்கா? அம்மாவுக்கா?
வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் நடத்த அனுமதி!