வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி-டி2
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி-டி2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி-டி2
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி எஸ்எஸ்எல்வி -டி1, 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரோவின் இந்த புதிய திட்டம், ராகெட்டின் சென்சார் செயலிழந்து தவறான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதால் தோல்வியில் முடிந்தது. முதல் முயற்சி தோல்வியுற்றாலும், இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.
அதன்படி மீண்டும் எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட்டை வடிவமைத்தது இஸ்ரோ. எஸ்எஸ்எல்வி – டி2, இஒஎஸ்-07 புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 3 செயற்கைக்கோள்களுடன் இன்று (பிப்ரவரி 10) காலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து 9.18 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இதற்கான கவுண்ட் டவுன் இன்று அதிகாலை 2.48 மணிக்குத் தொடங்கியது. சரியாக கவுண்ட் டவுன் தொடங்கி 6.30 மணி நேரத்திற்குப் பிறகு ராக்கெட் அனல் பறக்க விண்ணில் சீறி பாய்ந்தது.
இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள், பணியாளர்கள் என அனைவரும் உற்சாக கைதட்டிக் கொண்டாடினர்.
15 நிமிடங்களுக்குள்
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 13 நிமிடங்களுக்குள், ராக்கெட் முதல் செயற்கைக்கோளான இஒஎஸ்-07-ஐ சுற்றுப்பாதையில் செலுத்தவுள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற இரண்டு செயற்கைக் கோள்களையும் தலா ஒரு நிமிட இடைவெளியில் சுற்றுப்பாதையில் செலுத்தவுள்ளது.
எனவே ராக்கெட் ஏவப்பட்ட 15 நிமிட பயணத்திலேயே 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோ மீட்டர் வட்டப்பாதையில் செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் வைக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
அதிக கவனம்
முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-07, மொத்தம் 156 கிலோ எடை கொண்டது. இது புவி கண்காணிப்பு, கடலோர நிலப்பயன்பாடு,ஒழுங்குமுறை, நகர்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படும்.
இதனுடன் அமெரிக்காவின் ஜானஸ் மற்றும் இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ஆஸாதிசாட்-2 ஆகிய 2 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டது.
கடந்த முறை எஸ்எஸ்எல்வி -டி1 தோல்வியடைந்ததால் இந்த முறை எஸ்எஸ்எல்வி -டி2 ராக்கெட்டை செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எஸ்எஸ்எல்வி -டி1 தோல்வி குறித்த விசாரணையில், இரண்டாம் கட்ட பிரிவின் போது அதிர்வு தொந்தரவு இருந்ததால் தான் முயற்சி தோல்வியடைந்தது என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இஸ்ரோவின் புது முயற்சி
தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது.
இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராகெட்டுகளை விண்ணில் செலுத்தி அந்த திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.இதில், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை விண்ணில் செலுத்த முடியும். அதேபோல், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
இந்நிலையில், 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களைப் புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த சிறிய ரக ராக்கெட்டுகள் அதிகபட்சமாக 120 டன் எடையில் இருக்கும்.
மோனிஷா
‘டாடா’ ரிலீஸ்: கவின் வெளியிட்ட வீடியோ!
’கியூட்’ தேர்வு: விண்ணப்ப படிவ விநியோகம்!