பிரபாகரன் மனைவி மதிவதனி, அவரது மகள் துவாரகா இருவரும் உயிருடன் இருப்பதாக ஒரு பெண் பேசி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் 30 ஆண்டுக் காலமாக நடந்த உள்நாட்டுப் போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆகியோர் உயிரிழந்ததாகவும் இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
தற்போது போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள் உயிருடன் உள்ளார்கள் என அவ்வபோது செய்தி வரும் நிலையில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.
எனினும் அவர் தமிழ் ஈழ ஆர்வலர்கள் மத்தியில் பிரபாகரன் போரில் கொல்லப்படவில்லை என்றும், அவர் தற்போது வரை உயிருடன் இருக்கிறார் என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பிரபாகரனோடு போரில் கொல்லப்பட்டு விட்டதாக கருதப்படும் அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவலை மதிவதனி அக்கா எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண் ஒருவர் வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம், நான் தாரகா ஹரித்தரன், தந்தையின் பெயர் ஏரம்பு, தாயாரின் பெயர் சின்னம்மா. நாங்கள் பூங்கொடியை பூர்வீகமாக கொண்டவர்கள். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த போரின் காரணமாக எனது தங்கை மதிவதனியும், அவரது மகள் துவாரகா மற்றும் உறவினர்கள் இறந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறி மற்றும் ஊடகத்துறையினரால் செய்திகளை அறிந்து கொண்டேன்.
கடந்த சில ஆண்டு காலங்களாக அவர்கள் உயிருடன் இருப்பதாக வந்த செய்தியை அறிந்து கொண்டும், பின்பு அவர்களை நேரில் சந்தித்து உரையாடி உணவருந்தி விட்டுதான் வந்துள்ளேன். இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் எனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவிக்கிறேன். உண்மையிலேயே இந்த செய்தியை கடவுள் கொடுத்த கொடையாகவே நினைக்கிறேன். நன்றி வணக்கம்” என்று இவ்வாறு மதிவதனியின் அக்கா என்று தன்னை கூறிக்கொள்ளும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இயங்கி வரும் தமிழ் ஈழ ஆதரவு தொலைக்காட்சிகள் மற்றும் இணைய தளங்களிலும் இந்த வீடியோ திரும்ப திரும்ப தொடர்ச்சியாக வெளியாகி கொண்டே இருக்கிறது.
தற்போது மதிவதனியின் அக்கா வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோவில் பிரபாகரன் பற்றியோ, அவரது மகன் பாலச்சந்திரன் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.
எனினும் தனது தங்கை மதிவதனி, அவரது மகள் துவாரகா இருவரையும் பற்றி அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் உள்ளதாக வெளியான செய்தி நகைப்புக்குரியது என்றும் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு வீடியோ வெளியாகியுள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் நலின் ஹேரத் தற்போது தெரிவித்து உள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், ”விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் குறித்த நேரத்தில் வெளிவருவார். அவருடன் மனைவி, மகளும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று கூறினார்.
அப்போதும், ”2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டார். அதற்கான டீ.என்.ஏ ஆதாரங்களையும் நாம் எடுத்துள்ளோம்” என்று இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
விபத்திற்கு பிறகு முதன்முறையாக… ரிஷப் பந்த் வீடியோ வைரல்!
”சந்திரமுகியோட பெஸ்ட் ஃப்ரண்ட் நான்தான்டா”: வடிவேலுவின் டப்பிங் அட்ராசிட்டிஸ்!
சுங்கச்சாவடி கட்டணம் : வாகன ஓட்டிகளிடம் சுரண்டும் மத்திய அரசு!