ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 8) அறிவித்துள்ளது.
கேரளாவின் முன்னாள் முதல்வராகவும், 53 ஆண்டுகாலம் புதுப்பள்ளி தொகுதியின் எம்.எல்.ஏ.ஆகவும் இருந்த உம்மன் சாண்டி கடந்த மாதம் 18ஆம் தேதி காலமானார்.
இதனையடுத்து கேரளாவின் புதுப்பள்ளி உட்பட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
ஜார்க்கண்டின் தும்ரி, கேரளாவின் புதுப்பள்ளி, திரிபுராவின் போக்ஷாநகர் மற்றும் தன்புர், மேற்குவங்கத்தின் துப்குரி(தனித்தொகுதி), உத்தரப்பிரதேசத்தின் கோசி, உத்தரகண்டின் பகேஷ்வர் ஆகிய 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) வெளியிடப்படுகிறது. அன்று முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும் நிலையில், மனுக்களை திரும்ப பெற ஆகஸ்ட் 21ஆம் தேதி குறிக்கப்பட்டுள்ளது,
தொடர்ந்து செப்டம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, செப்டம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒருமாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அந்தந்த தொகுதிகளில் நடைமுறைக்கு வந்துள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா