சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்தை முடக்கிய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 15) ஒத்திவைத்தது.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரேவும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தற்போது முதல்வராக உள்ள ஏக்நாத் சிண்டேவும் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரினர்.
இதனால் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி வில் அம்பு சின்னத்தை முடக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
இதை எதிர்த்து உத்தவ் தாக்ரே தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சஞ்சீவ் நருலா, உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்ரே நீதிபதிகள் சதீஸ் சர்மா சந்திரா, சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மேல்முறையீடு செய்தார்.
தாக்ரே தரப்பில், “கட்சியினரிடம் கேட்காமல் இதுவரை தேர்தல் ஆணையம் ஒரு கட்சி சின்னத்தை முடக்கியதில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிந்தநிலையில், “உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று கூறி தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.
பிரியா