புகழ்பெற்ற புனிதஸ்தலமாகக் கருதப்படும் ஷீர்டி சாயிபாபா கோயில் வரும் 1ஆம் தேதியிலிருந்து காலவரையற்று மூடப்பட இருக்கிறது.
இதற்கான காரணத்தை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஷீர்டி சாயிபாபா கோயிலுக்கு விடுமுறை நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாயிபாபாவை தரிசிக்க வருகின்றனர்.
இந்தக் கோயிலுக்கு தற்போது மகாராஷ்டிரா போலீஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
ஷீர்டியில் உள்ள விமான நிலையத்துக்கு 2018ஆம் ஆண்டிலிருந்து மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் (Central Industrial Security Force – CISF) பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
இனி ஷீர்டி சாயிபாபா கோயிலுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பை மத்தியத் தொழிற்பாதுகாப்பு படையினரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளது மாநில அரசு. மாநில அரசின் இந்த முடிவுக்குக் கோயில் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கோயில் பாதுகாப்பைக் கையாள மத்தியத் தொழிற்பாதுகாப்புப் படையினருக்குப் போதிய பயிற்சி இருக்காது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே மத்தியத் தொழிற்பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பை ஏற்க முடியாது கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதோடு அரசின் முடிவை எதிர்த்து வரும் மே 1ஆம் தேதியிலிருந்து காலவரையற்று சாயிபாபா கோயிலை மூடப்போவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் வரை கோயில் அடைக்கப்படுவதால் கோடை விடுமுறையையொட்டி வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
மேலும், இந்தக் கோயிலை நம்பி ஷீர்டியில் ஆயிரக்கணக்கான கடைகள் மற்றும் உணவு விடுதிகள் இருக்கின்றன. கோயில் மூடப்படும் பட்சத்தில் இந்த உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள், கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படும்.
அரசு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண கோயில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தக் கோயிலில் பாஜக அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் என்பவரும் அறங்காவலராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்