அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா மூன்றாவது முறையாகப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 11) உத்தரவிட்டுள்ளது. எனினும் அவரை ஜூலை 31 வரை பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளது.
சஞ்சய் குமார் மிஸ்ரா அமலாக்கத் துறை இயக்குநராக 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அமலாக்கத் துறை இயக்குநராக இவரது பணி காலம் 2020 நவம்பரோடு முடிவடைய இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் என்ற பணி காலத்தை மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது
முதல்கட்டமாக 2021 நவம்பர் வரை அவரது பணி காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், 2022 நவம்பர், 2023 நவம்பர் என மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத் , சஞ்சய் கரோல் அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில், ‘ஒரு குறிப்பிட்ட நபரின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதற்கான காரணம் என்ன?. அந்த நபரால் மட்டுமே அந்த பதவிக்குரிய கடமையைச் செய்ய முடியுமா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் 2023 நவம்பரோடு சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதன் பிறகு அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று வாதிடப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மூன்றாவது முறையாகவும் சஞ்சய் மிஸ்ராவை பணி நீட்டிப்பு செய்தது செல்லாது. அவரது பணி நீட்டிப்பு சட்டவிரோதமானது.
எனினும் புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை அதாவது ஜூலை 31 வரை அவர் இந்த பணியில் தொடர அனுமதி வழங்கப்படுகிறது.
மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு 2021ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது.
அமலாக்கத் துறை இயக்குநர் போன்ற முக்கியமான பதவி வகிக்கும் அதிகாரிகளுக்குப் பணி நீட்டிப்பு வழங்கும் போது அது குறுகிய காலத்துக்கே இருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அமலாக்கத் துறை இயக்குநர் பதவி நீட்டிப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் சட்டவிரோதம் எனக் கூறியிருப்பது முக்கியத் துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரியா
கொடநாடு வழக்கு: ஆகஸ்ட் 1-ல் ஓபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
810 பக்கம்… ரூ.127 கோடி : முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!