ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் உக்ரைனைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணை: 10 பேர் பலி!
ஒலியை விட 10 மடங்கு அதி வேகத்தில் உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்த கிரிவி ரீ என்ற நகரத்தின் மீது நடந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரானது இரண்டு ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். தூதரக அளவிலான பேச்சுவார்த்தை பலனளிக்காத சூழலில், போர் தொடருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய தலைநகர் கீவில் ஆக்மத்தித் என்ற குழந்தைகள் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. அந்நாட்டில் குழந்தைகளுக்கான மருத்துவ வசதி கொண்ட மிகப் பெரிய மருத்துவமனையாக இது உள்ளது.
இதன் மீது ரஷ்யா நேற்று (ஜூலை 8) திடீரென அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. எனினும், இதனால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
ஆனால், கீவ் நகரில் நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று, உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்த கிரிவி ரீ என்ற நகரத்தின் மீது நடந்த மற்றொரு தாக்குதலில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு இது மிக பெரிய தாக்குதல் ஆகும். இந்தத் தாக்குதலில், கின்ஜால் என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
ரஷ்யாவிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களில் இதுவும் ஒன்றாகும் என உக்ரைன் நாட்டின் விமான படை தெரிவித்துள்ளது.
இந்த கின்ஜால் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்ல கூடிய திறன் வாய்ந்தவை.
அதனால் இந்த வகை ஏவுகணைகளை தடுத்து மறிப்பது என்பது கடினம். இந்த தாக்குதல்களால், நகரத்தில் உள்ள கட்டடங்கள் குலுங்கின.
இந்தத் தாக்குதல்கள் பற்றி பேசியுள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி,
“வெவ்வேறு வகையான 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், உக்ரைனின் ஐந்து நகரங்கள் முக்கிய இலக்காக கொள்ளப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: மன அழுத்தத்தை விரட்டும் மகா மந்திரங்கள்!
டாப் 10 நியூஸ் : மோடி – புதின் பேச்சுவார்த்தை முதல் டெல்லி செல்லும் தமிழக பாஜகவினர் வரை!
பியூட்டி டிப்ஸ்: சோர்வடைந்த முகம்… பிரகாசமாக மாற…