அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தேஜஸ்வி யாதவ் பீகார் மாநில முதலமைச்சர் ஆவார் என்று பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் கிஷன்கான்ஞ் சட்டமன்ற உறுப்பினர் இசார் ஆசிப் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 15 அன்று செய்தியாளர்களிடம் பேசிய இசார் ஆசிப், “பீகார் மாநில மக்கள் தேஜஸ்வி யாதவ் முதல்வர் ஆவதை விரும்புகிறார்கள்.
மாநிலத்தின் பெரும்பாலான தலைவர்கள் தேஜஸ்வியை முதல்வராக்க தயாராக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
சில நடைமுறைகள் உள்ளதால், தேஜஸ்வி யாதவ் பீகார் மாநில முதல்வராவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங் தேஜஸ்வி யாதவ் 2023-ஆம் ஆண்டில் பீகார் மாநில முதல்வராக இருப்பார் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தேசிய அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.
2023-ஆம் ஆண்டு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பீகார் மாநில முதல்வர் ஆவார். நிதிஷ் குமாருக்காக தேசம் காத்திருக்கிறது. தேஜஸ்வி முதல்வராவதற்கு பீகார் காத்திருக்கிறது.
2023-ஆம் ஆண்டில் பீகார் மாநில எதிர்காலத்தை தேஜஸ்வி யாதவிடம் நிதிஷ்குமார் ஒப்படைப்பார் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
ஜெகதானந்த் சிங் கூறிய கருத்து தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில், நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இரண்டாவது முறையாக பீகார் மாநில முதல்வரானார். பாஜகவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூட்டணியிலிருந்து விலகி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.
2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், பீகார் மாநில முதல்வர் பதவியை நிதிஷ்குமார் தேஜஸ்வி யாதவிடம் ஒப்படைத்துவிட்டு, 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஆயத்தமாகும் வகையில் தேசிய அரசியலில் கவனம் செலுத்த உள்ளார் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் அதிமுக திட்டமல்ல: அமைச்சர் துரைமுருகன்
லுங்கியில் லோக்கல் டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்