உச்ச நீதிமன்றத்தில் உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, உச்ச நீதிமன்ற நடவடிக்கையை நேரலையில் ஒளிபரப்பலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
பாலியல் குற்றங்கள், திருமண தகராறுகள் போன்ற வழக்குகளைத் தவிர மற்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் நேரலையில் ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. இந்தநிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பொறுப்பேற்ற பிறகு, வழக்கு விசாரணைகளை நேரலை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று(செப்டம்பர் 27) அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல்நாளான இன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் வழக்கு விசாரணைகள் நேரலை செய்யப்படுகிறது.
அதன்படி உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு நேரலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா சிவசேனா கட்சி அரசியல் வழக்கு, டெல்லி அரசு மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான அதிகாரப்போட்டி ஆகிய வழக்குகள் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளன.
அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகளை போலவே மற்ற நீதிபதிகள் விசாரிக்கும் வழக்குகளும் விரைவில் நேரலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் யூடியூப்பிலும் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் வழக்கு விசாரணைகள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஓய்வு பெற்ற நாளில், என்.ஐ.சி-யின் வெப்காஸ்ட் போர்ட்டலில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
சரிந்தது தங்கம் விலை : பெண்கள் மகிழ்ச்சி!
பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமித்த பன்னீர்