பள்ளிக்குத் தாமதமாக வருபவர்களுக்கு வழங்கப்படும் நூதன தண்டனை: மாணவிகள் போராட்டம்!
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள சரோஜினி நாயுடு அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தாமதமாக வந்தால், கழிப்பறையை சுத்தம் செய்ய ஆசிரியர் வற்புறுத்துவதாகக் கூறி, பள்ளி வளாகத்திற்கு வெளியே மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாணவி ஒருவர், “நாங்கள் 5 முதல் 10 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும், ஆசிரியர் எங்களை வகுப்பிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்.
எங்களை இரண்டு மணி நேரம் வரையில், தனித்து நிற்க வைத்து கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு கூறுவார். புதிதாக நியமிக்கப்பட்ட வர்ஷா ஜா ஆசிரியர்தான், இதுபோன்ற தண்டனையை அடிக்கடி கொடுப்பார்’’ என்று கூறியுள்ளார்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 12 மாணவிகள் மயக்கமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்தவுடன் காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிஃப் மசூத்தும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இருப்பினும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையில் எம்எல்ஏவிடம் பேசிய பள்ளி முதல்வர், “மாணவர்களுக்கு வழங்கப்படும் விநோதமான தண்டனைகள் குறித்து எங்களுக்கு தெரியாது. இருந்தபோதிலும், மாணவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இத்தகைய நிலை எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் ஏற்படக் கூடாது. விசாரணைக் குழுவை அமைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டுள்ளேன்.
வர்ஷா ஜா என்ற ஒரு குறிப்பிட்ட ஆசிரியருக்கு எதிராக மட்டுமே, மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்; முழு நிர்வாகத்திற்கும் எதிராக அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள, மத்தியப்பிரதேச திறந்தநிலைப் பள்ளி வாரியத்தின் இயக்குநர் பி.ஆர்.திவாரி, “குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை நாங்கள் விடுமுறையில் அனுப்பியுள்ளோம்; அவர் நீக்கமும் செய்யப்படுவார். எல்லாவற்றையும் சரி செய்ய ஒரு மாதகாலம் ஆகும். மாணவர்களின் அனைத்து குறைகளையும் நாங்கள் தீர்ப்போம்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா… வெண்டைக்காய் ஊறவைத்த நீர்?
கிச்சன் கீர்த்தனா : எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை!
துரைமுருகன் இதயம் எப்படி இருக்கிறது? சிங்கப்பூர் டாக்டர் ரிப்போர்ட்!
ஸ்டைலிஷ் அவதார்: விஜய் ஸ்டைலா நடிச்ச படங்களை பார்க்கலாமா?