சிங்கப்பூருக்கு சொந்தமான 2 செயற்கைகோள்கள் இன்று (ஏப்ரல் 22) மதியம் 2.19 மணியளவில் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.-சி55 ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நம் நாட்டுக்கு தேவையான காலநிலை மாற்றம், தகவல் தொடர்பு, எல்லை பாதுகாப்பு போன்றவற்றை அறிவதற்காக பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.
அதேபோல் வணிக ரீதியில் அவ்வப்போது வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் இஸ்ரோ ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவப்படுகின்றன.
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக டெலியோஸ்-2 மற்றும் லூமிலைட்-4 எனும் 2 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்த 2 செயற்கைக்கோள்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் இன்று மதியம் சரியாக 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
முன்னதாக இந்த பி.எஸ்.எல்.வி சி 55 ராக்கெட் மாதிரியுடன் கடந்த 20ம் தேதி இரவு திருப்பதி மலைக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு, நேற்று காலை கோவிலுக்குச் சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-55 22 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.
சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்கள் மூலம் பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு தகவல்களை பெற முடியும்.
கிறிஸ்டோபர் ஜெமா