டெல்லியில் புதிய கடமை பாதை மற்றும் நேதாஜி சிலையை பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 8) திறந்துவைத்தார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் பகுதி வரை இருக்கும் சாலைக்கு ராஜ்பாத் என்று பெயரிடப்பட்டிருந்தது.
இந்தப் பாதையை புணரமைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருந்தது. அத்துடன் இதன் பெயரையும் மாற்றியமைக்க முடிவு செய்திருந்தது.
அதன்படி தற்போது ராஜ்பாத் என்ற பெயரை கடமை பாதை என்று மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதற்கான தீர்மானம் டெல்லி மாநாகராட்சியிலும் நிறைவேறியுள்ளது.
இந்த பழைய ராஜ்பாத் பகுதியை மத்திய அரசு தற்போது சீரமைத்துள்ளது. அதன்படி அந்தப் பகுதியில் அழகுப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகள், நடைபாதைகள் கொண்ட புல்வெளிகள், பசுமையான இடங்கள், புதுப்பிக்கப்பட்ட கால்வாய்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இவை தவிர நடந்துசெல்பவர்களின் வசதிக்காக சுரங்க பாதைகள், மேம்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதிகள் மற்றும் புதிய கண்காட்சி தளங்கள் மற்றும் இரவு விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்துள்ளார்.

அதுபோல், இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் தினத்தையொட்டி,
கடந்த ஜனவரி 23ம் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
முன்னதாக நேதாஜிக்கு அதே இடத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்தியா கேட் பகுதியில் மின்ஒளி வடிவில் இருந்த சிலைக்கு பதில் புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மோனோலித்திக் கிரானைட் கற்களால் 28 அடி உயரமுள்ள நேதாஜி சிலையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
செப்டம்பர் 9 முதல் 11ம் தேதி வரை இரவு 8.00 மணிக்கு நேதாஜியின் வாழ்க்கை குறித்த ட்ரோன் கண்காட்சி இந்தியா கேட் பகுதியில் காண்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைப் பார்வையாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள உயரமான சிலைகளில் இதுவும் ஒன்று. 28 அடி உயரம் கொண்ட இந்த சிலை 280 மெட்ரிக் டன் எடை அளவில் மோனோலித்திக் கிரானைட் என்ற கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
26ஆயிரம் மணிநேரம் கடின உழைப்புக்குப்பின் உருவாக்கப்பட்ட இந்த சிலை, முற்றிலும் கைகளால் செதுக்கப்பட்டவை.
தெலங்கானா மாநிலம் கம்மம் நகரிலிருந்து கறுப்பு கிரானைட் கல் டெல்லிக்கு கொண்டுவரப்படுவதற்காக 140 சக்கரங்கள் கொண்ட டிரக் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் தலைமையிலான குழுவினர், பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி கையால் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்