பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக குறைந்த அளவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் முன்பு இருந்தது போல முகக்கவசம் கட்டாயம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வியும் இருந்து வந்தது.
ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் ஆனால், அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியிலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் இன்று (ஏப்ரல் 7) உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக கடற்கரை, திரையரங்குகளுக்கு செல்லும் மக்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கொரோனா பரவல் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா