ஓயோ நிறுவனர் தந்தை மரணம்: திருமணம் முடிந்த மூன்று நாளில் சோகம்!
ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால், மாடியில் இருந்து கீழே விழுந்து இன்று (மார்ச் 10 ) உயிரிழந்தார்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள செக்டார் 54 இல் அமைந்துள்ள DLF-ன் ‘தி க்ரெஸ்ட் சொசைட்டி’ அடுக்குமாடி குடியிருப்பின் 20- வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் ரமேஷ் அகர்வால். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் , தன்னுடைய தந்தை ரமேஷ் அகர்வால் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால்.
அதில் “ கனத்த இதயத்துடன், எனது குடும்பமும் நானும், எங்கள் வழிகாட்டும் ஒளி மற்றும் வலிமை, என் தந்தை ரமேஷ் அகர்வால் இன்று( மார்ச் 10 ) காலமானார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து என்னையும் எங்களில் பலரையும் ஊக்கப்படுத்தினார்.
அவரது மரணம் எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு. எனது தந்தையின் கருணையும் அரவணைப்பும் எங்களின் கடினமான காலங்களில் எங்களை முன்னேற்றியது.
அவரது வார்த்தைகள் எங்கள் இதயங்களில் ஆழமாக எதிரொலிக்கும். இந்த துயரமான நேரத்தில் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 7 ஆம் தேதி தான் ஒயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலுக்கும், கீதன்ஷாவுக்கும் டெல்லியில் திருமணம் நடைபெற்றது.
இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சாப்ட்பேங்க் தலைவர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ரித்தேஷ் அகர்வாலின் திருமணம் நடைபெற்ற மூன்றே நாளில் இப்படி ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இணையத்தில் லீக்கான ‘’ஜவான்’’ படக்காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம்!
480 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா… அஸ்வின் அதிரடி!