எத்தனை ரயில் விபத்துகள் நடந்தாலும் மத்திய அரசு பாடம் படிக்காது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து புறப்பட்ட பாக்மதி அதிவிரைவு ரயில் கவரப்பேட்டையை வந்தடைந்த போது மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைன் என்று சொல்லக்கூடிய சரக்கு ரயில் நிறுத்தி வைத்திருந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டதில் விபத்தில் சிக்கியது.
75 கி.மீ வேகத்தில் சென்ற போது, சரக்கு ரயில் மீது மோதியதில் பெட்டிகள் முழுமையாக கழன்று விட்டன. 18 பேர் காயமடைந்த நிலையில், தற்போது மீட்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த விபத்துக்கு சதி திட்டம் காரணமாக இருக்கிறதா? என்பது குறித்தும் தண்டவாளங்களில் ரயில் கவிழ்ப்பதற்கான சதி நடத்தப்பட்டதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ரயில் விபத்து குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, பாலசோர் ரயில் விபத்தை போலவேதான் இந்த ரயில் விபத்தும் நடந்துள்ளது. இத்தனை விபத்துக்கள் நடந்தும் மத்திய அரசு பாடம் படித்து கொள்ளவில்லை . இந்த அரசு விழித்துக் கொள்வதற்கு முன் எத்தனை மக்கள் பலியாகப் போகிறார்களோ என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் கோர விபத்து நிகழ்ந்தது. பின்னர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீதும் மோதியது. இந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நட்புக்கு வயது தடை கிடையாது… ரத்தன் டாடாவின் நண்பர் சாந்தனு யார்?