வளர்ந்து வரும் நாடுகளின் சந்தை நாணயங்களை விட இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.82.69-ஆக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ள நிர்மலா சீதாராமன், உலக வங்கி சர்வதேச நாணய நிதி மாநாட்டில் பங்கேற்ற பின்னர், நேற்று (அக்டோபர் 14) வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்திய ரூபாய் வீழ்ச்சி குறித்த கேள்விக்கு விளக்கமளித்த நிர்மலா சீதாராமன், “அமெரிக்க டாலர் வலுவாக வளர்வதே இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம். இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதாக பார்க்காமல், அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைவதாகத்தான் பார்க்கிறோம்.
பல வளர்ந்து வரும் நாடுகளின் சந்தை நாணயங்களை விட இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை. டாலர் ஏற்றத்தாழ்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவை சமாளிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் அமலாக்கத்துறை மிகவும் சுதந்திரமான ஒரு அமைப்பு. சிபிஐ அல்லது அமலாக்கத் துறை என எந்த ஏஜென்சியாக இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் சில முதன்மையான ஆதாரங்கள் அடிப்படையில் தான் சோதனையில் ஈடுபடுகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டில் உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பால் உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
யுத்தத்தின் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால் வளர்ந்த நாடுகள் பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக, அமெரிக்கா மூலதன பொருட்களின் கட்டண உயர்வுகளை உயர்த்தியது. மூலதனம் அமெரிக்கா பக்கம் திரும்பியது தான் டாலர் விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
பாஜகவுடன் சமரசமா?: சிரித்துக்கொண்டே பதிலளித்த மு.க.ஸ்டாலின்
திக்… திக்…நிமிடங்கள் : குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்!