பிரதமர் மோடி வருகையையொட்டி மோர்பி மருத்துவமனை அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டு வரும் புகைப்படங்களை பகிர்ந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் மச்சு ஆற்றின் மீது இருந்த பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 140க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மோர்பியில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் மோடி நேரில் சென்று விபத்தில் சிக்கியவர்களை சந்திக்க இருக்கிறார். இதையடுத்து அந்த மருத்துவமனையை அவசர அவசரமாக சீரமைத்து வருகின்றனர்.
மருத்துவமனையின் இடிபாடுகளை சரிசெய்து, கழிவறைகளை மாற்றியமைத்து அத்துடன் வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
மேலும் மருத்துவமனை சுவர்களுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சிவில் மருத்துவமனையின் புனரமைப்பு குறித்த படங்களைப் பகிர்ந்து கொண்ட காங்கிரஸ், பிரதமர் சிறந்த புகைப்படங்களை எடுப்பதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகக் கூறியது.
மேலும் புனரமைப்பு பணியை “சோகத்தின் நிகழ்வு” (event of tragedy) என்று அழைத்த காங்கிரஸ், பலர் இறந்துவிட்டனர், ஆனால் அதற்காக அவர்கள் வெட்கப்படவில்லை, ஒரு நிகழ்வுக்கு தயாராவது போன்று தயாராகி வருகின்றனர் என்று விமர்சித்துள்ளது.
ஆம் ஆத்மியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, மோடியின் வருகைக்கு முன்னதாக மருத்துவமனையின் சுவர்கள் வர்ணம் பூசப்பட்டதைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
“பிரதமர் மோடியின் போட்டோஷூட்டின் போது கட்டிடத்தின் மோசமான நிலை வெளிவரக்கூடாது என்பதற்காக மோர்பி சிவில் மருத்துவமனைக்கு ஒரே இரவில் வர்ணம் பூசப்படுகிறது” என்று ஆம் ஆத்மி இந்தியில் கூறியுள்ளது.
“141 பேர் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காணவில்லை, உண்மையான குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆனால் இவற்றையெல்லாம் பாஜக போட்டோஷூட் செய்து மறைக்க வேண்டும்.” என்று கடுமையாக சாடியிருக்கிறது.
கலை.ரா
மோடியும் சங் பரிவாரமும் வழங்கும் ‘இலவச’ மரணங்கள்!
”இன்னைக்கு கனமழை பெய்யும்- வீட்டுக்குள் பத்திரமா இருங்க”: வெதர்மேன்!