மாதவிடாய் விடுமுறை குறித்த கொள்கையை உருவாக்குவது குறித்து மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பணியிடம் மற்றும் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்க மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் பீகார் மற்றும் கேரளா மட்டுமே பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை அனுமதிக்கின்றன.
மகப்பேறு நலச் சட்டம், 1961 இன் பிரிவு 14 இன் கீழ் மாதவிடாய் விடுமுறை குறித்து ஒரு வழிகாட்டுதலை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.
மகப்பேறின் போது கடினமான காலத்தில் பெண்களை கவனித்துக்கொள்ள இச்சட்டத்தில் இடம் இருக்கும் போது அதற்கு முந்தைய கால கட்டமான மாதவிடாய் காலம் தெரிந்தோ, தெரியாமலோ இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.
இங்கிலாந்து, சீனா, ஜப்பான், தைவான், இந்தோனேஷியா, தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகள் ஏற்கனவே ஏதாவது ஒரு வடிவத்தில் மாதவிடாய் விடுமுறையை வழங்குகின்றன.
அதுபோன்று இந்தியாவிலும் விடுமுறை அளிக்க முன்வர வேண்டும். சமூகம், சட்டமன்றம் ஆகியவை இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
1992ஆம் ஆண்டு முதல் பிகாரில் 2 நாட்கள் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (பிப்ரவரி 24) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் இவ்வழக்கில் தலையிட்டு (intervenor) தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
மாதவிடாய் விடுப்பு வழங்குமாறு நிறுவனங்களின் முதலாளிகளை கட்டாயப்படுத்தினால், அது முதலாளிகள் தங்கள் நிறுவனங்களில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான நடைமுறைத் தடையாக இருக்கக்கூடும் என்று சட்டக் கல்லூரி மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சந்திரசூட், மாதவிடாய் விடுப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.
“மாதவிடாய் என்பது உயிரியல் நடைமுறை. பணியிடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாகுபாடு இருக்கக் கூடாது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இது கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் தங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
கொள்கை கருத்துகளை கருத்தில் கொண்டு மனுதாரர் பெண்கள் மேம்பாட்டுத் துறையை அணுகினால் சரியாக இருக்கும்.
இந்த விவகாரத்தை கொள்கை வகுப்பாளர்களிடம் வீட்டுவிடுவோம். அதன்படி பெண்கள் மேம்பாட்டுத் துறை மனுதாரரின் கோரிக்கையை குறித்து பரிசீலிக்க வேண்டும்.
அவர்கள் இதற்கான கொள்கையை வகுக்கட்டும். அதன் பிறகு நாம் அதனை பரிசீலிப்போம்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பிரியா
ராகுல் பேச்சுக்கு திரிணாமுல் எம்.பி. மகுவா மொய்த்ரா பதிலடி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் கணவர் காலமானார்!
