குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் 2 தமிழர்கள் உள்ளிட்ட 40 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இது தொடர்பான விபரங்களை தருமாறு இந்திய தூதரகத்தை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
குவைத்தின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் பேங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டடத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. அந்த கட்டடத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், குவைத் நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ கட்டிடத்தின் பல பகுதிகளுக்கும் பரவியது. அந்த கட்டிடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்போது 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்தியாவில் இருக்கும் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், குவைத்தில் இருக்கும் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள 965-65505246 என்ற உதவி எண்ணை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும், குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், “காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் ஸ்வைகா நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 30 இந்தியர்களை நேரில் சந்தித்தார்.
அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கும் என உறுதி அளித்துள்ளார். அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே விரைவில் குணமடைவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தொடர்ந்து, குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இன்று (ஜூன் 12) ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்து சோகத்தை ஏற்படுத்துகிறது. எனது எண்ணங்கள் அனைத்தும் தீவிபத்தில் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்து வாடும் அனைவரிடமும் உள்ளது.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் 2 தமிழர்கள் உள்ளிட்ட 40 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இது தொடர்பான விபரங்களை தருமாறு இந்திய தூதரகத்தை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தீ விபத்தில் 2 தமிழர்கள் உயரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அவர்கள் தொடர்பான தகவல்களையும், காயம் அடைந்தவர்களின் விவரங்களையும் தங்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் குவைத்தில் இருக்கும் தமிழ் சங்கங்களை தொடர்பு கொண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிய முயற்சித்துள்ளதாக தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை கூறியுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…