நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தை வைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற வலைதள ஆப்களைப் பயன்படுத்தி, நடிகர், நடிகைகள் பெயரில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
அவற்றில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகளின் போட்டோக்கள், நடித்துக் கொண்டிருக்கும் படங்கள், அன்றாட நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை அப்டேட் செய்து வருகின்றனர்.
அதை உண்மை என்று நம்பும் நபர்கள் பலர் இறுதியில் ஏமாறுகின்றனர். அதாவது, போலி பெயர்களில் அக்கவுன்ட்டுகளை உருவாக்கி மர்ம ஆசாமிகள் பலர், அவர்களிடமிருந்து பணத்தை கறந்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை அம்மு அபிராமி யூடியூப்பில் புதிய சேனல் தொடங்கி தனது வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அம்மு அபிராமியின் யூடியூப் சேனல் லோகோவை அப்படியே காப்பியடித்து போலியாக ஒரு சேனலை ஆரம்பித்தார்.
அதை உண்மை என்று பின்தொடர்ந்த ஒருவரிடம், ’உங்களுக்கு ஐபோன் பரிசு விழுந்துள்ளது, அதை அனுப்பி வைக்க டெலிவரி கட்டணம் ரூ.5 ஆயிரம் அனுப்புங்கள்’ என்று அம்மு அபிராமி கேட்பதுபோல் கேட்டு பணத்தைப் பறித்துள்ளார்.
”யாரும் இதுபோல் நம்பி ஏமாற வேண்டாம்” என அம்மு அபிராமி ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் வேண்டுகோள் விடுத்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. இதோ ஓர் இளைஞர் நடிகையிடம் பேசுவதாக ஆசைப்பட்டு தன் பணத்தை இழந்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தை ப்ரோபைல் போட்டோவாக வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண், தன்னுடைய முகநூலில் கீர்த்தி சுரேஷ் படத்தை ப்ரோபைல் போட்டோவாக மாற்றி, அந்த அக்கவுண்ட் மூலம் ஆண்களுக்கு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார்.
அதில், பரசுராமா என்ற நபரும் இணைந்தார். இதையடுத்து, மஞ்சுளாவும் பரசுராமாவும் ஃபேஸ்புக்கில் சாட் செய்யத் தொடங்கியுள்ளனர். பின்னர் வாட்ஸ்ஆப் மூலமாகவும் பேச ஆரம்பித்தனர்.
இதில், பரசுராமாவிடம் காதல் வார்த்தை பேசிப் பேசி கொஞ்ச கொஞ்சமாக பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார்.
மஞ்சுளாவின் மயக்கத்தில் இருந்த அவரும் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
ஒருகட்டத்தில் மஞ்சுளா கேட்டார் என்பதற்காக, தன்னுடைய நிர்வாண படத்தை பரசுராமா அவருக்கு அனுப்ப, அந்த வீடியோவை வைத்து மிரட்ட ஆரம்பித்துள்ளார், மஞ்சுளா. அதனால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார்.

இதனால் ஏமாந்துபோன பரசுராமா கடந்த நவம்பர் 15ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில், விசாரணை நடத்திய சைபர் பிரிவு போலீசார், ஹசன் மாவட்டத்தின் தசராளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளாவை கைது செய்தனர். விசாரணையில், அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
பரசுராமாவிடம் இருந்து சுமார் ரூ.40 லட்சம் அளவிற்கு பணம் பறித்துள்ளார் மஞ்சுளா.
அதை வைத்து தங்கம், கார், பைக் என பொருள்களை வாங்கிக் குவித்த மஞ்சுளா, புதிதாக வீடு ஒன்றையும் கட்ட ஆரம்பித்துள்ளார்.
இதுபோல் வேறு யாராவது மஞ்சுளாவிடம் ஏமாந்து உள்ளனரா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அவருக்கு துணையாய் இருந்து தற்போது தலைமறைவாகி உள்ள அவரது கணவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜெ.பிரகாஷ்
குவாரி, குட்காவில் லஞ்சம்-கூவத்தூரில் செலவு: விஜயபாஸ்கரை சிக்க வைக்கும் ஐடி
ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை முடக்க முடியாது: எடப்பாடி