கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன் விற்பனைக்குத் தடை: எதற்காக?

கோபி மஞ்சூரியனில் தடை செய்யப்பட்ட ரோடமைன்-பி எனப்படும் செயற்கை நிறமூட்டி கலக்கப்படுவதை கர்நாடகா சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளதைத் தொடர்ந்து  கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன் விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரோடமைன்-பி என்ற வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது கர்நாடகாவிலும் மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் ரோடமைன்-பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு கர்நாடகா சுகாதாரத்துறை நேற்று (மார்ச் 11) தடை விதித்துள்ளது. கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

“பலரும் விரும்பி உண்ணும் கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன்-பி என்ற செயற்கை நிறமூட்டியைப் பயன்படுத்தக் கூடாது. மீறினால் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரோடமைன்-பி போன்ற செயற்கை நிறமூட்டிகளால் தென் மாநிலங்களில் பரவலாக பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புக்கு மக்கள் உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையொட்டி கர்நாடகா முழுவதும் 170 கோபி மஞ்சூரியன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில் 64 மாதிரிகள் பாதுகாப்பானவையாக இருந்தன. எஞ்சிய 106 மாதிரிகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்த பாதுகாப்பற்ற மாதிரிகளில்  டார்ட்ராசைன், கார்மோஸைன், சன்செட் யெல்லோ, ரோடமைன்-பி  போன்ற செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகளை பெரிய உணவகங்கள் தொடங்கி சாலையோர கடைகள் வரை பல இடங்களில் இருந்து சேகரித்தோம். இவற்றில் சில மாதிரிகள் கர்நாடகாவின் மூன்று முக்கிய நட்சத்திர உணவகங்களில் இருந்து பெறப்பட்டவை. அனைத்திலும் ஆபத்தான ரோடமைன்-பி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரோடமைன்-பி உபயோகிக்கும் உணவுகள் அடர் சிவப்பில் காட்சியளிக்கும். இதற்காகவே இந்த நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் ரோடமைன்-பி செயற்கை நிறமூட்டி பயன்பாடு தடை செய்யப்படுகிறது. இதனால் கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன் விற்பனைக்கும் தடை செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நெல்லை சொதி

”தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது” : கர்நாடக அரசுக்கு எடப்பாடி கண்டனம்!

’நல்ல வேள அது நடக்கல’ : அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: பொன்முடி மீண்டும் அமைச்சர் ஆவாரா? முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts