”அமித் ஷா பேசியது பொய்”: அம்பலப்படுத்திய கலாவதி

Published On:

| By christopher

Kalavati Bandurkar reacts

ராகுல்காந்தியை குற்றம் சாட்டும் விதமாக  தன்னை குறித்து பேசிய அமித் ஷாவின் பேச்சை ‘பொய்’ என்று கலாவதி என்ற பெண் கூறியுள்ளார்.

மக்களவையில் நேற்று (ஆகஸ்ட் 10) நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது ராகுல்காந்தியை குற்றஞ்சாட்டும் வகையில் மஹராஷ்டிராவை சேர்ந்த கலாவதி என்ற பெண்ணை குறிப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

அவர்,  “இந்த சபையில் 13 முறை அரசியலில் களம் கண்டு, 13 முறையும் தோல்வியடைந்த உறுப்பினர் ஒருவர் இருக்கிறார்.

அவர், 2008ல்‌ மகாராஷ்டிராவைச்‌ சேர்ந்த கலாவதி என்ற பெண்ணின்‌ வீட்டுக்குச்‌ சென்ற ராகுல்‌ காந்தி உணவு சாப்பிட்டார்‌;

ஆனால்‌, அதன்‌ பிறகு 6 ஆண்டுகள்‌ பதவியில்‌ இருந்தும்‌ காங்கிரஸ்‌ எதுவும்‌ செய்யவில்லை;

கலாவதிக்கு வீடு, மின்சாரம்‌, கழிவறை, மருத்துவ உதவி ஆகியவற்றை மோடி அரசுதான்‌ செய்தது” என அமித்ஷா நேற்று பேசியிருந்தார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கலாவதியை இன்று செய்தியாளர்கள் சந்தித்து கேள்வி எழுப்பிய போது அவர்,

”அமித் ஷா சொன்னதெல்லாம் பொய். வீடு, மின்சாரம்‌ என அனைத்து வசதிகளும்‌ எனக்கு காங்கிரஸ்‌ அரசிலேயே கிடைத்தது;

ராகுல்‌ காந்திதான்‌ அதற்கு காரணம்‌. இதுகுறித்து அவர்கள் (அமித் ஷா) சொல்லியது அனைத்தும் பொய் என கலாவதி‌ கூறியுள்ளார்.

சரி யார் இந்த கலாவதி பண்டூர்கர்?

கலாவதியின் கணவரும், விவசாயியுமான பரசுராம் 2005, டிசம்பர் 23 அன்று கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து விதவையான கலாவதியை அப்போது எம்.பி.யாகவும், காங்கிரஸ் கட்சி பொது செயலாளராகவும் இருந்த ராகுல்காந்தி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ராகுல்காந்தியின் வருகை ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சுலபா இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமிருந்து ரூ.30 லட்சம் உட்பட பல தரப்பிலிருந்தும் அவருக்கு நிதி உதவி குவிந்தது.

மேலும் 2009 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின் போது வாணி தொகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிட கலாவதி முடிவு செய்தார். இருப்பினும், அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

Bharat Jodo Yatra: After 14 years Kalawati meets Rahul Gandhi to thank him

இதனையடுத்து கடந்த ஆண்டு வாஷிம் பகுதியில்  நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் கலாவதி கலந்துகொண்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இதனால் மீண்டும் கலாவதி ஊடக வெளிச்சத்திற்கு வந்தார். இந்த நிலையில், அமித் ஷா, ராகுல்காந்தியை குற்றம் சாட்டும் விதமாக கலாவதியை தொடர்புபடுத்தி பேசினார்.

இதற்கு தற்போது அமித் ஷாவின் பேச்சை மறுத்த கலாவதி, அவரது பொய்யையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பொன்முடி வழக்கில் மிக மோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் புது உத்தரவு!

சிறுமியை முட்டி தள்ளிய மாடு: உரிமையாளர் மீது வழக்குப் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share