21 ஆண்டுகள், 10 ஆயிரம் கோடி… காஸாவில் தொடரும் சோகம்!

Published On:

| By Selvam

காஸா மீதான போரால் தரைமட்டமான கட்டடங்களின் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகள் ஆகலாம் என்று ஐநா அவையின் மதிப்பீட்டாய்வில் தெரிய வந்துள்ளது.

காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர், 2023-ல் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்து வைக்கப்பட்டனர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில், காஸாவில் 46,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 20.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் இருந்து புலம்பெயர்ந்தனர்.

இந்த நிலையில், ஓராண்டுக்கும் மேலான இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, போர் நிறுத்தக் காலமான ஆறு வாரங்களுக்கு இரு தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) பிற்பகல் 2.45 மணியளவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த இஸ்ரேல் – காஸா போரால் காஸாவில் பல பகுதிகள் முற்றிலுமான அழிவைச் சந்தித்துள்ளன.

உணவு, எரிபொருள், மருத்துவம், உறைவிடம் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காஸா மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க பல நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போர் நிறுத்தத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் மீண்டும் தங்கள் இடங்களுக்கு திரும்புகின்றனர். போரால் ஏற்பட்ட சேதங்கள் அவர்களை கலங்கச் செய்துள்ளது. இடிபாடுகளில் எஞ்சி இருக்கும் பொருட்களை அவர்கள் தேடுகின்றனர்.

“எங்கள் குழந்தைகள் அணிய ஆடைகள் இருக்குமா என இடிபாடுகளுக்கு அடியில் தேடுகிறோம். உடைமைகளை இடிபாடுகளில் இருந்து வெளியே இழுக்கிறோம். எங்கள் நிலைமை மோசமாக உள்ளது. நாங்கள் தெருக்களில் இருக்கிறோம். எல்லாம் எங்கள் விதி” என்றும், “வீடுகளே இல்லை. இடிபாடுகளை மட்டுமே பார்க்கிறோம். நாங்கள் எங்கே வசிப்பது? எங்கே போவோம்?” என்கிறார்கள், தங்கள் பகுதிக்குத் திரும்பிவந்துள்ள மக்கள்.

இந்த நிலையில், இஸ்ரேலால் தாக்கப்பட்டு, காஸாவில் இடிந்து தரைமட்டமான கட்டடக் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுக்காலம் வரையில் ஆகலாம் என்றும், ரூ.10,000 கோடிக்கு மேல் செலவாகலாம் என்றும் ஐநா அவையின் கணிப்பில் தெரிய வந்துள்ளது.  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share