இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று (அக்டோபர் 26) ஈரான் மீது துல்லியமான தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் தற்போது இஸ்ரேல்- லெபனான், இஸ்ரேல்- ஈரான் என விரிவடைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது 170 ட்ரோன்கள், 150 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மீண்டும் இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருந்த நிலையில், அவ்வாறு செய்தால் எங்களது தாக்குதல் இன்னும் உக்கிரமாக இருக்கும் என்று ஈரான் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் இன்று அதிகாலை ஈரான் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக ஐடிஎப் எனப்படும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
In response to months of continuous attacks from the regime in Iran against the State of Israel—right now the Israel Defense Forces is conducting precise strikes on military targets in Iran.
The regime in Iran and its proxies in the region have been relentlessly attacking… pic.twitter.com/OcHUy7nQvN
— Israel Defense Forces (@IDF) October 25, 2024
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “இஸ்ரேல் மீது பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதலை நடத்தி வருகிறது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் மீது ஏழு முனைகளில் இருந்து ஈரான் இடைவிடாமல் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் இருக்கிறது.
எங்களது தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணி திரட்டப்பட்டுள்ளன. எங்கள் நாட்டையும் எங்கள் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் ராணுவத்திற்கு அந்நாட்டின் உயர்தலைவர் அயட்டோலா அலி அறிவுறுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஈரான் தலைநகர் டெக்ரான் அருகே பலத்த சத்தத்துடன் இஸ்ரேல் ராணுவத்தால் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேற்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் இந்த தாக்குதல்களால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா