அமெரிக்காவில், இந்தியப் பெண்களின் மீது தாக்குதலில் ஈடுபட்ட மெக்ஸிகன் அமெரிக்கப் பெண்ணை டெக்சாஸ் மாகாண ப்ளனோ போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு, இந்தியப் பெண்கள் நான்கு பேர் இரவு உணவு சாப்பிடச் சென்றனர்.
உணவு முடித்தவுடன் கார் பார்க்கிங் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்களை நோக்கி வந்த பெண் ஒருவர் இந்தியப் பெண்களை இன ரீதியிலாக பேசி, தாக்குதலில் ஈடுபட்டார்.
அதனை இந்தியப் பெண்கள் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட அந்தப் பெண் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட பெண் டெக்சாஸ் மாகாணத்தின் ப்ளனோ பகுதியில் வசிக்கக்கூடிய மெக்ஸிகன் அமெரிக்கன் பெண்மணி, எஸ்மெரல்டா என்பது தெரியவந்தது.
அவர் மீது போலீசார் உடலில் காயங்களை ஏற்படுத்தி தாக்குதல் மற்றும் பயங்கரவாத மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
மேலும், அவருக்கு 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெண்கள் பதிவு செய்த வீடியோவில் மெக்சிகன் அமெரிக்கன் பெண் பேசும் போது, “நான் இந்தியர்களை வெறுக்கிறேன்.
இந்தியர்களுக்கு வசதியான வாழ்க்கை வேண்டும் என்று அமெரிக்கா வருகின்றனர். நீங்கள் வெளிப்படையாக இந்தியாவில் பெரிய வாழ்ககையை வாழவில்லை.
அனைத்தும் இலவசமாகக் கிடைக்க வேண்டுமென்று நீங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்திருக்கிறீர்கள்.
நான் ஒரு மெக்ஸிகன் அமெரிக்கன். நான் இங்கு தான் பிறந்தேன். நீங்கள் அமெரிக்காவில் பிறந்தவர்களா? நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இந்தியர்களான நீங்கள் இருக்கிறீர்கள்.
இந்தியாவில் உங்கள் வாழ்க்கை நன்றாக இருந்தால் பின்பு ஏன் நீங்கள் அமெரிக்காவிற்கு வருகிறீர்கள்.
வீடியோ எடுப்பதை நிறுத்துங்கள்” என்று இந்திய பெண்களை அநாகரீகமாக தாக்கி பேசினார். மேலும் அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்ய முயன்றார்.
இதுகுறித்து இந்தியப் பெண்கள் டெக்சாஸ் மாகாண காவல்துறைக்குப் புகார் செய்தனர்.
மேலும், இதுகுறித்து இந்தியப் பெண்கள் தங்களது முகநூல் பக்கத்திலும் எழுதியிருந்தனர். ராணி பானர்ஜி என்ற பெண், “நான் டல்லாஸ் பகுதியில் 29 வருடங்களாக வசித்து வருகிறேன்.
இதற்கு முன்பு வரை நான் அவமானப்படுத்தப்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய இதுபோன்ற நிகழ்வு ஏற்படவில்லை” என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.
செல்வம்
அண்டார்டிகாவில் நான்கு மாதங்களுக்குப் பிறகு உதித்த சூரியன்!