கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் கர்லாலைச் சேர்ந்த கார்த்திக் சைனி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டப் படிப்பிற்காக கனடா சென்றார். அவர் கனடாவில் உள்ள ஷெரிடன் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில், கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கார்த்திக், சைக்கிளில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கார்த்திக் மரணம் குறித்து டொரண்டோ காவல்துறை தரப்பில் தெரிவிக்கும்போது, “கனடாவின் யோங்கே தெரு செயிண்ட் கிளேர் அவென்யூ சந்திப்பில், சைக்கிளில் பயணித்த போது, கார்த்திக் மீது லாரி ஒன்று வேகமாக மோதியுள்ளது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் கார்த்திக்கிற்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சைனி மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
கார்த்திக்கின் உடல் இறுதி சடங்கிற்காக விரைவில் இந்தியா கொண்டு வரப்படும் என்று கார்த்திக்கின் உறவினர் பிரவீன் சைனி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த மேக்பிரீத் சீதி என்ற 18-வயது மாணவன் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அவருடன் பயின்ற சக மாணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கார்த்திக் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக் மரணம் குறித்து ஷெரிடன் கல்லூரி தரப்பில் தெரிவிக்கும்போது, “கார்த்திக்கின் திடீர் மரணத்தால் கல்லூரி நிர்வாகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
உதயநிதி அமைச்சரானால் என்னவாகும்: சீமான் கிண்டல்!
மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்: கலவரத்தில் ஈடுபட்ட பெல்ஜியம் ரசிகர்கள்!