லெபனான் நாட்டில் கடந்த செப்டம்பர் 17 அன்று பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் பலியாகினர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் வைத்திருந்த பேஜர்களும் வெடித்துள்ளன.
பேஜர்கள் வெடித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், செப்டம்பர் 18 ஆம் தேதி வாக்கி டாக்கிகளும் வெடித்து சிதறின. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினர் மட்டுமல்லாமல், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்தும் காயமடைந்துமுள்ளனர்.
இந்த பேஜர்கள் அனைத்தும் தைவான் நாட்டின் ‘கோல்ட் அப்பொலோ” நிறுவனத்தின் லோகோவைக் கொண்டிருந்தன. இதனால், தைவானில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், தைவான் நிறுவனம் தங்களுக்கும், பேஜர் வெடிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்து விட்டது.
தற்போது, இந்த பேஜர்கள் பல்கேரியாவிலுள்ள நோர்ட்டா குளோபல் என்ற நிறுவனம் விநியோகம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இந்தியாவை சேர்ந்தவர். நார்வே குடியுரிமை பெற்றவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதாவது, ஹங்கேரியை சேர்ந்த பி.எஸ்.சி கன்சல்டன்ட் நிறுவனம் கோல்ட் அப்பல்லோ லோகோவை பயன்படுத்தி தயாரித்த பேஜர்களை நோர்ட்டா குளோபல் நிறுவனம் வாங்கி விநியோகித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடியை சேர்ந்த ரென்சன் ஜோஸால் நோர்ட்டா குளோபல் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் சொந்த ஊரான மானந்தவாடிக்கு வந்து சென்றுள்ளார். பேஜர் வெடிப்புக்கு பிறகு, இவரை காணவில்லை. இவரது பெற்றோர் இன்னும் மனந்தவாடியில்தான் வசித்து வருகின்றனர்.
தங்களது மகனை கண்டுபிடித்து தரும்படி பிரதமர் மோடிக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். ரென்சன் ஜோஸ் நார்வேயில் வசிக்கும் கேரள மக்களிடத்தில் மிகவும் பிரபலமானவர். ஓணம் பண்டிகையை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் மலையாள மக்களுடன் சேர்ந்து விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்பவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நார்வே அரசு ரென்சன் ஜோசுக்கு சர்வதேச வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு ஒரு வர்த்தக மாநாட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றவர் மாயமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தேர்தல் பத்திரம் : நிர்மலா சீதாராமன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு!
சிறையில் ஒவ்வொரு நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்: செந்தில் பாலாஜி உருக்கமான பதிவு!