வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு 31ஆம் தேதிக்கு பிறகு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித் துறையினர் அறிவித்துள்ளனர்.
2021-2022ஆம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம். அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இது தொடர்பாக, வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருகிற டிசம்பர் வரை ரூ.5,000, ஜனவரி, முதல் மார்ச் வரை ரூ.10,000அபராதம் செலுத்த வேண்டும். மார்ச் மாதத்திற்கு பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
எனவே, அவகாசம் நிறைவடைவதால், கணக்கு தாக்கல் செய்யாதோர், விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு குறுந்தகவல் மற்றும் இ-மெயில் வாயிலாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் வருமான வரித் துறையினர் கூறியுள்ளனர்.
-ராஜ்